திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல புதிய நடைமுறை அறிமுகம்
திருச்சி, ஆக.23 திருச்சியிலிருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு ஒரே பயணச்சீட்டின் மூலம் பயணிக்கும் புதிய நடைமுறையை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது .
திருச்சி – இலங்கை இடையே ஏற்கெனவே ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தினசரி போக்குவரத்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக சிங்கப்பூர் செல்லும்வகையில் ஒரு கூடுதல் புதிய வசதியை அறிமுகப் படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த வசதி புதன்கிழமை முதல் திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது திருச்சி – சிங்கப்பூர் என ஒரே பயணச்சீட்டின் மூலம் இலங்கை சென்று அங்கிருந்து, அதே விமானம் அல்லது அதே நிறுவனத்தைச் சேர்ந்த மாற்று விமானம் மூலம் பயணிக்க முடியும். இலங்கையில் உடமைகளை இறக்கி மீண்டும் சோதிப்பது, குடியேற்றச்சோதனை உள்ளிட்டவை தேவையில்லை. ஒரு முறை அவற்றை திருச்சியில் மேற்கொண்டாலே போதுமானது. இதுபோல ஏற்கெனவே வளைகுடா நாடுகளுக்கு திருச்சியிலிருந்து ஒரே விமான சீட்டு மூலம் இலங்கை சென்று அங்கிருந்து அதே நிறுவனத்தின் வேறு (மாற்று ) விமானம் மூலம் பயணிக்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
அதுபோலவே சிங்கப்பூருக்கும் செல்ல இந்த புதிய வசதியை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம், திருச்சியில் நடைமுறைப் படுத் தியுள்ளது. அந்த வகையில்,திருச்சியிலிருந்து காலை 9.55க்கு புறப்பட்டு 10.55 க்கு இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்தை அடைகிறது. பின்னர் அங்கிருந்து பகல் 12.15க்கு புறப்பட்டு சிங்கப்பூரை மாலை 6.55க்கு சென்றடைகிறது. அங்கிருந்து புறப்படும் விமானம் மறுநாள் அதிகாலை இலங்கை வந்தடைந்து அங்கிருந்து மறுநாள் காலை 7.05க்கு புறப்பட்டு திருச்சியை காலை 8.05க்கு வந்தடைகிறது.
பொதுவாகவே ஸ்ரீலங்கன் விமானங்களில் சுமார் 30 கிலோ வரையில் உடைமைகளை எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படுவதால், பயணிகள் எப்போதுமே ஸ்ரீலங்கன் விமானங்களை விரும்புவர். அந்த வகையில் திருச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்லும் இந்த விமானத்திலும் அதிகளவில் உடைமைகளைகொண்டு செல்ல அனுமதிக்கும் பட்சத்தில் விமான இருக்கைகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய், புதன் மற்றும் சனி,ஞாயிறு கிழமைகளில் இந்த வசதியை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள முடியும்