திருச்சியில் நாளை கல்விக்கடன் முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
திருச்சி, அக்.23 திருச்சியில் நாளை (அக்.24) கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கடன் முகாம் நாளை (அக்.24) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளும் இந்த முகாமில் பங்கேற்க உள்ளன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகள், இயன்முறை (பிசியோதெரபி) கல்லூரிகள், மருந்தியல் (பி.பார்ம்) கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அய்.டி.அய் நிறுவனங்களில் பயின்று வரும் மாணவ, மாணவியாகள் அனைவரும் கீழ்கண்ட ஆவணங்களுடன் கல்வி கடன் முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கல்வி கடன் கோருவதற்கு தேவையான ஆவணங்கள்: மாணவர் மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை, மாணவர் மற்றும் பெற்றோர் பான்கார்டு, மாணவர் ஜாதிச்சான்று, பெற்றோர் ஆண்டு வருமான சான்று, மாணவர் மற்றும் பெற்றோர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், கல்வி சான்று, கலந்தாய்வு ஆணை, கல்லூரி சேர்க்கைக் கடிதம், கல்லூரி கட்டண விபரம், கல்வி பயிலும் சான்று. (போனாபைடு சான்று), முதல் பட்டதாரி சான்று, கடன் பெறும் வங்கியின் பெயர் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை எடுத்த வரவும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.