வாழவந்தான் கோட்டை ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தில் அவசர கால மாதிரி ஒத்திகை
திருச்சி நவ. 12 திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன கிடங்கின் (ஐஓசிஎல்) வெளியே அவசர கால மாதிரி ஒத்திகை நடந்தது.
திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிடங்கு உள்ளது. இந்த நிறுவனத்திலிருந்து பெட்ரோல் நிரப்பிவிட்டு வெளியே வந்த டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டு, பிடித்த தீயை அணைக்கும் விதமாக ஒத்திகை நடைபெற்றது.
அப்போது, திருச்சி இனாம்குளத்தூரில் உள்ள ஐஓசிஎல் தொழிற்சாலையிலிருந்து அவசர கால ஊர்தி, மணப்பாறை டிஎன்பிஎல் மற்றும் திருச்சியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, டேங்கர் லாரியின் தீ அணைக்கப்பட்டது. சுகாதாரத்துறையிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயமைடந்த வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பயிற்சியின் போது, டேங்கர் லாரி தீ பிடித்ததாக் கருதப்பட்ட சூழலில் அவசர வெளியேற்றம், தீயணைப்பு, மருத்துவ உதவி, போக்குவரத்து ஒழுங்கு, தகவல் பரிமாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டன.
இதில், திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் விமலா, திருவெறும்பூர் தாசில்தார் தனலெட்சுமி, திருச்சி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் இளவரசி, உதவி இயக்குநர் காமாட்சி, திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் திலகேந்திரன், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை, போக்குவரத்துத்துறையினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, வாழவந்தான்கோட்டை ஐஓசிஎல் டெர்மினல் மேலாளர் வெங்கட்ராமலு வரவேற்றார்.