படுகொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞர் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரண நிதி
திருச்சி, நவ.12 திருச்சியில் பட்டியலின இளைஞர் தாமரைச்செல்வன் படுகொலை – சிபிஐ(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் தொடர் போராட்டத்தால் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு – ரூ.6 லட்சம் இழப்பீடு பெறப்பட்டது.
திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டை கீழவீதியை சேர்ந்தவர் பா.தாமரைச்செல்வம். இவருடைய மனைவி சங்கீதா(22) இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலக்கரை பகுதியிலுள்ள பெயிண்ட் கடையில் பணியாற்றிய போது அதே கடையில் வேலை பார்த்த ஸ்ரீரங்கம் நேதாஜி வீதியை சேர்ந்த சதீஷ்குமார்(26) என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து சங்கீதா தாமரைச் செல்வனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாமரைச்செல்வன் சதீஷ்குமாரை பொது இடத்தில் வைத்து தாக்கியுள்ளார். இதனால் தாமரைச்செல்வன் மீது ஆத்திரத்தில் இருந்த சதீஷ் திங்கள் காலை இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்ட தாமரைச்செல்வனை பீமநகரில் உள்ள பள்ளி வாசல் அருகே சதீஷ்குமார், தனது நண்பர்கள் பிரபாகரன், கணேசன், நந்தகுமார், இளமாறன் ஆகியோர் வெட்டி படுகொலை செய்தார். இதையடுத்து காவல்துறையினர் நடவடிக்கை சதீஷ்குமாரை காலில் சுட்டுபிடித்தனர். மற்ற 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் 3 பேருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த தாமரைச் செல்வன் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரியும், உடலை வாங்க மறுத்தும் உறவினர்கள் மற்றம் சி.பி.ஐ.(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் திங்கள்கிழமை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து செவ்வாய்க் கிழமைமையும் உடலை வாங்க மறுத்து தாமரைச்செல்வன் வீட்டின் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த திருச்சி மேற்கு வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இடைக்கால நிவாரண நிதியாக ரூ.6 இலட்சத்துக்கான காசோலை வட்டாட்சியர் பிரகாஷ் கொலை செய்யப்பட்ட தாமரைச் செல்வன் தயாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட அவரது உறவினர்களிடம் தாமரைச்செல்வன் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் CPIM மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிச்செல்வன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளர்கள் ஆர்.கலைச்செல்வி, எம்.ஜெயசீலன், மாவட்ட தலைவர்கள் எஸ்.ரேணுகா, கோ.கனல் கண்ணன் மற்றும் பா.லெனின், சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.