எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு : முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
திருச்சி, ஜூலை 29 எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு எதிர்க்கட்சிகளை திமுக அரசு முடக்க பார்க்கிறது, அது ஒரு போதும் நடக்காது என்று திருச்சி மத்திய சிறையில் எம்.ஆர். விஜயபாஸ்கரை சந்தித்த பின் சி.வி.சண்முகம் பேட்டி
ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சித்தது தொடர்பான் வழக்கில் கைது செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் மத்திய சிறையில் சந்தித்தனர்.
சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடந்து வருகிறது.சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்காமல் எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு எதிர்க்கட்சிகளை முடக்க தமிழக அரசு நினைக்கிறது. அது ஒரு போதும் நடக்காது.
முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இதனை சட்டரீதியாக சந்தித்து அவர் மீது பதியப்பட்ட வழக்கு பொய் வழக்கு என நீதிமன்றத்தில் நிரூபித்து விஜயபாஸ்கர் வெளியே வருவார் என தெரிவித்தார்.
தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் விஜயபாஸ்கரை சந்திக்க மத்திய சிறைக்கு வந்த போது அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர்கள் பரஞ்சோதி, குமார், சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக வினர் உடன் இருந்தனர்.