காருக்குள் புகுந்த பாம்பை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்
திருச்சி, மே 7 திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலையில் உள்ள மருத்துவர் ஆனந்த் என்பவர் தன்னுடைய வீட்டிற்கு முன்பு காரை நிறுத்தி இருந்தார். இன்று காலை டிரைவர் காரை எடுக்க வந்த போது திடீரென பாம்பு ஒன்று காருக்கு அடியில் சென்று காருக்குள் நுழைந்து கொண்டது. இதையடுத்து மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் வந்து நீண்ட நேரம் போராடியும் பாம்பை பிடிக்க முடியவில்லை.
பின்னர் காரை சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றனர். அங்கு ஹைட்ராலிக் மூலம் காரை மேலே உயர்த்திய பின் காரின் கீழ் பகுதியில் தீயணைப்பு துறையினர் தேடிய போது பாம்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சாரைப் பாம்பை லாவகமாகப் பிடித்து பையில் கட்டி எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர். முன்னதாக காரில் பாம்பு இருப்பது கண்டு பலரும் அங்கு திரண்டு வந்து நின்று வேடிக்கை பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.