திருச்சியில் அரசு மாதிரி பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழா
ஒரு பிறவியில் கற்ற கல்வியானது ஒருவனுக்கு அந்தப்பிறவியில் மட்டுமல்லாது, ஏழு பிறப்புகளிலும் துணைநிற்கும் என்கின்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க அதற்கான முன்னெடுப்பு செயல்பாடாக துவங்கப்பட்டதுதான் இந்த மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிகள். இவற்றை மாநில அளவிலான அரசுப்பள்ளி மாணவர்களின் திறன் சார்ந்த முன்னோடிப்பள்ளிகள் என்றுரைப்பதே சாலச்சிறந்தது.
அரசாணை(நிலை) எண்.42 உயர் கல்வித் (பி2) துறை நாள் 20.02.2024 ன் படி இப்பள்ளியானது 2021ஆம் ஆண்டு, நம் தேசப்பிதா அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி பத்து மாவட்டங்களில் திறப்பதாக முடிவு செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, செந்தண்ணீர்புரத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் தலைமையிலும், பள்ளிக் கல்வித் துறை ஆணையர் முன்னிலையிலும், பள்ளிக் கல்வித் துறை மாநில திட்ட இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்பில் முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு மாதிரிப் பள்ளி துவக்கிவைக்கப்பட்டது.
இம்மாதிரி பள்ளியானது திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், துவாக்குடி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வசமிருந்த நிலத்தில் 3.20.0 ஹெக்டேர் நிலத்தில் ரூ. 1933.20 இலட்சம் மதிப்பீட்டில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் 22 வகுப்பறைகள். வேதியியல் ஆய்வகம், கணினி ஆய்வகம், நூலகம், பல்நோக்கு அறை, உயிரியல் ஆய்வகம், இயற்பியல் ஆய்வகம், முதல் உதவி மற்றும் விளையாட்டு அறை 1, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அறைகள் 3 அலுவலக அறை, பெண்கள் மற்றும் ஆண்கள் ஓய்வறை, பெண்கள் மற்றும் ஆண்கள் மாற்றுத்திறனாளி அறைகள் 6, RO குடிநீர் வசதிகள், 50,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 2 தரை தண்ணீர் தொட்டிகள். தடையற்ற மின் வழங்கல், உயர் மட்ட விளக்கு போன்ற வசதிகளுடன் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
2023-2024 ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பில் 157 மாணவர்களும், 11 ஆம் வகுப்பில் 130 மாணவர்களும், 2024-2025ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பில் 129 மாணவர்களும், 11 ஆம் வகுப்பில் 98 மாணவர்கள், 2025-2026ஆம் ஆண்டில் 800 மாணவர்களும் ஆக மொத்தம் 1314 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதலமைச்சரால் நாளை (மே8)திறந்து வைக்கப்பட உள்ளது.
இம்மாதிரி பள்ளி மூலமாக பயின்ற மாணவர்களில் 2021-2022ஆம் ஆண்டு முதல் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்று IIT, Mandi, IIST, Tiruvandram, CNLU, Patna, NIT, Trichy, NIFT, Patna, Chennai, NIFTEM, Thanjavur, FDDI, Chennai, Anna University, Chennai, Trichy, Madurai, Coimbatore, Thoothukodi, Cuddalore மருத்துவக்கல்லூரிகள், Chennai, Namakkal, Orathanadu கால்நடை மருத்துவக் கல்லூரிகள் பி எஸ் ஜி. கோயம்புத்தூர் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் 331 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.