மணப்பாறையில் வேப்பிலை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
திருச்சி, ஏப்.21 மணப்பாறையில் புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா – ஆயிரக்கணக்கான மக்கள் அம்மனை வழிபட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்க உள்ள நிலையில் அதன் தொடக்கமாக நேற்று விநாயகர் வழிபாடு அதைத் தொடர்ந்து பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் பூந்தட்டுக்களை ஏந்தியபடி காத்திருந்து அம்மனுக்கு பூ போட்டு வழிபட்டுச் சென்றனர். இதே போல் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் ஊர்வலமாக வந்தது.
இந்த நிகழ்வில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அனைவரும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். நேற்று தொடங்கி இந்த நிகழ்வு இன்று அதிகாலை நிறைவு பெற்றது. திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.