மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு

0 195
Stalin trichy visit

திருச்சி, செப். 8  திருச்சியில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலியானார். மேலும் பெண் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி மாநகரில் சனிக்கிழமை  இரவு திடீரென்று மழை பெய்தது. இந்த மழை சுமார் 8 மணி முதல் 10:30 மணி வரை திருச்சி மாநகர், மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடந்தன.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கீழரண் சாலையில் சத்தியமூர்த்தி நகர் உள்ளது.  இங்கு 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்த சிவா – சுகந்தி தம்பதியினருக்கு 4 பெண் குழந்தை உள்ளன. இந்நிலையில் கடைசி பெண்ணான கார்த்திகா (வயது 13) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில்  கடந்த சனிக்கிழமை அன்று  தனது வீட்டருகே உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார்.சனிக்கிழமை இரவு பெய்த கனமழையால் மண் சுவர் மழைநீரில் ஊறிய நிலையில் இருந்தது.

இந்நிலையில் திடீரென மண் சுவர் சரிந்து கார்த்திகா மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி கார்த்திகா உயிருக்கு போராடினார். மேலும் இந்த சம்பவத்தின் போது
சுவர் அருகே நின்றிருந்த கொளஞ்சியம்மாள் (வயது 44) என்பவரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி அபயக்குரல் எழுப்பினர்.
இவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளை அகற்றினர்.
இருந்தபோதிலும் கார்த்திகா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளஞ்சியம்மாளுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த சிறுமி கார்த்திகா உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த கொளஞ்சியம்மாள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சுவர் இடிந்து விழுந்து சிறுமி இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.