நாகநாதசுவாமி கோவில் மாசித் தேரோட்டம்
திருச்சி நாகநாதசுவாமி கோவில் மாசித் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருச்சி, பிப். 23 திருச்சி மலைக்கோட்டைக்கு அருகே நந்தி கோவில் தெருவில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி உடனுறை நாகநாதசுவாமி கோவில் உள்ளது. சார மாமுனிவர், சிவபெருமானை வேண்டி தவமிருந்து வரம் பெற்ற திருத்தலம். நாக கன்னிகள் வழிபட்டு அருள்பெற்ற திருத்தலம் என்பதால் இங்குள்ள சிவனுக்கு நாகநாதர் என்ற திருநாம் அமைந்ததாக தலபுராணம் கூறுகிறது.
இந்த கோவிலில் நாகநாதசுவாமியை வழிபட்டால் கால சர்ப்ப தோஷம், நாகதோஷம் விலகும் என்பது ஐதீகம்.
இவ்வாலயத்தின் மாசிமகத் திருவிழாவானது கடந்த 15ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பபட்டு அம்பாளும், நாகநாதசுவாமியும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளியும் வீதி உலா நடைபெற்றுவந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மாசித் தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது, மீனலக்னத்தில் நாகநாதசுவாமி, அம்பாளுடன் அலங்கரிக்கப்பட்ட முதல் திருத்தேரில் எழுந்தருள, மற்றொரு தேரில் ஆனந்தவல்லி தாயார் மற்றும் சிறிய தேரில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேரைவடம்பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் வீதிகளின் வழியாக வலம் வந்து பின்னர் சன்னதிக்குச் சென்றடைந்தார். இதில் வழிநெடுகிலும் பக்தர்கள் சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் கண்டனர்