மணல் கடத்தலுக்கு இடையூற இருந்தவர் வீடு சூறை – 30க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு போலீஸ் வலை!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அப்பாத்துறை ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டு குறித்த சமயபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்த நபரின் ஒடு வீட்டினை 13 இரு சக்கர வாகனங்களில் வந்த 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சூறையாடினர்.

சமயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அப்பாத்துறை ஊராட்சியில் உள்ள தெற்கு தெரு பகுதியில் அமைந்துள்ளது கொள்ளிடம் ஆறு. இந்த கொள்ளிடம் ஆற்றில் எசனைக்கோரை கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் மற்றும் ராமஜெயம் ஆகியோர் தலைமையில் தினசரி மணல் கொள்ளை லாரியிலும் இருசக்கர வாகனத்திலும் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவானந்தம் (32) என்பவர் சமயபுரம் காவல்நிலையத்திற்கு நீண்ட காலமாக தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் அப்பாத்துறை தெற்கு தெரு சாலையில் நின்றிருந்த சிவானந்தத்தினை எசனைக் கோரை கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் உள்ளிட்ட சிலர் காரில் வந்து, சிவானந்தத்தினை தாக்கி காரில் கடத்த முயன்றனராம். அவர்களிடமிருந்து சிவானந்தம் தப்பியோடியுள்ளார். உடனே ராமதாஸ் மற்றும் ராமஜெயம் ஆதரவாளர்கள் 30 க்கும் மேற்பட்டோர் 13 இருசக்கர வாகனத்தில் பட்டா கத்தி, இரும்பு ராடு, கட்டை போன்ற ஆயுதங்களுடன் வந்திருந்து சிவானந்தத்தின் ஒடு வீட்டினை அடித்து நொறுக்கினர்.
அப்பாத்துறை தெற்கு தெரு கிராம மக்கள் வீட்டினை சூறையாடிய இளைஞர்களை விரட்டிய போது , இரண்டு இரு சக்கர வாகனத்தினை அங்கேயே விட்டு விட்டு அனைவரும் தப்பியோடினர். தப்பியோடிய ராமதாஸ், ராமஜெயம், மொட்டை, அஜய், அருண், மதன், அப்பு, பாலா, ராம்கி, சுதன் உள்ளிட்ட 30 பேரை சமயபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் தலைவராக செயல்பட்ட ராமதாஸ், ராமஜெயம் ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் எசனைக்கோரை கிராமத்தில் தீபாவளி பண்டிகையின் போது ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 3 பேர் வெட்டி கொலைசெய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக சமயபுரம் போலீசார் இரு கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo