காங்கிரஸ் கட்சியிலிருந்து த.வெ.கவிற்கு யாரும் சென்றால் அதனை அணை போட்டு தடுக்க முடியாது: திருநாவுக்கரசர் பேட்டி!
திருச்சி, ஜூலை 20 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில், திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
“தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி தேர்தலுக்கு பின் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாத இடங்களில் பாஜக மற்ற கட்சிகளை உடைத்து ஆட்சியில் அமர்கிறார்கள். எனவே தமிழ்நாட்டில் இது போன்று நடந்துள்ளது புதிது கிடையாது.
தேர்தல் கூட்டணிகள் மாறியவுடன் அரசியல் கட்சிகள் மாறி மாறித் திட்டிக் கொள்வது அநாவசியமானது. இதனால் பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சி வேண்டாம் என்றுதான் மக்கள் விரும்பி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். இதற்குப் பிறகு திமுக ஆட்சி குறித்து நான் தனியாக எந்தச் சான்றிதழும் (Certificate) கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது வருத்தமளிக்கிறது. ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அரசுகள் ஜனநாயக முறையில்தான் எதிர்கொள்ள வேண்டும். அதேபோல், அரசியல் விமர்சனங்களை விமர்சன ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ஆனால், அந்த விமர்சனங்களும் உண்மையானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும்.
யாரையுமே கைது செய்யக் கூடாது என்று சொன்னால், நாட்டில் யாராலும் ஆட்சியை நடத்த முடியாது. யார் என்ன சொன்னாலும் சகித்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்பதில்லை. சட்டம் ஒழுங்கு சார்ந்த நடவடிக்கைகளை அந்தந்தச் சம்பவங்களின் பின்னணியைப் பொறுத்தே நாம் மதிப்பிட முடியும்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து த.வெ.கவிற்கு யாரும் சென்றால் அதனை யாரும் அணை போட்டு தடுக்க முடியாது என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.