மணப்பாறை கால்நடை சந்தை குத்தகை ரத்து : நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
திருச்சி, ஜூலை 20 மணப்பாறை கால்நடை சந்தைக்கான குத்தகையை ரத்து செய்த நகராட்சி நிர்வாகம். தொடர் புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை இந்த சந்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது செவ்வாய்கிழமையே சந்தை நடைபெறுகின்றது. இந்நிலையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் போது அதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் விதித்துள்ள நிபந்தனைகளின் படி, நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை மட்டுமே வசூலிக்க வேண்டும்.
ஆனால் அதை விட மிக அதிகமாக பணம் வசூல் செய்வதாகவும் எழுந்த தொடர் குற்ற சாட்டின் அடிப்படையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இதே போல் வாட்ஸ் அப் எண்ணிலும் கூடுதல் வசூல் தொடர்பான புகார்களை தெரிவிக்க நகராட்சி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. பல கட்ட விசாரணையின் முடிவில் விதிமுறைகள் மீறபட்டு இருப்பதாக கூறி சந்தையை 2026 – 27 ம் ஆண்டிற்கான குத்தகை உரிமத்தை 16.07.2026 முதல் ரத்து செய்து நகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.