கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் “ஆய்வு நோக்கில் இசை, நடனம் மற்றும் பிற நுண்கலைகள்” என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக் கழக இசைத் துறையுடன் இணைந்து “ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் அருள் பணி லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் ப.நடராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் மற்றும் திரைப்படக் கலைஞர், நடனக் கலைஞர் பத்மஸ்ரீ ஷோபனா ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்புரையாற்றிய துணை வேந்தர் கலை என்பது காண்போர் கேட்போர் உயிர்நாடியை தொடவேண்டும். உணர்வூட்ட வேண்டும், நிகழ்த்துவோர் உணர்வுடன் ஈடுபட்டு கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் கலையைக் கற்பதில் தனித்துவம் காட்ட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு கலைகள் போய்ச் சேர வேண்டும். கலையை மாணவர்கள் முறையாகப் பயின்று பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து கருத்துரையாற்றிய பத்மஸ்ரீ ஷோபனா எதற்காக நாம் இத்தகைய கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்? அதனால் என்ன பயன்? கலைஞர்கள் என்றுமே தனித்துவமானவர்கள் என்பதை உணர வேண்டும். இன்றைய சமூக ஊடகங்களின் புரட்சி உலகில் நவீன கலவை நடனம் செய்தல் சிறப்பு. குறிப்பாக நடன இலக்கணம் தெரிந்தவர்களால்தான் நவீன நடனத்தையும் சிறப்பாகச் செய்ய முடியும். இன்றைய நவீன மாற்றங்கள் சரியானதுதான். ஆனால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகஙகளில் பதிவிடும் நடனங்கள் முறையாக இருப்பதில்லை. முறையாகக் கற்றுக் கொண்டு பதிவிடுதல் நன்மைதரும். இல்லையெனில் வளரும் தலைமுறைக்கு நடன வடிவங்கள், பாடல்கள் பண்பாடு இது தான் என வெளிப்படும் போது அது தவறானதாக மாறிவிடும். திறந்த மனதுடன் கலையைக் கற்றல் கற்பித்தலில் மாணவர்கள் முன் வருதல் வேண்டும் என்றார்.
முன்னதாக முதல்வர் முனைவர் ப. நடராஜன் வரவேற்புரையாற்றினார். முனைவர் வேங்கடலட்சுமி நன்றி கூறினார்.
அதனைத் தொடந்து கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றது. நுண்கலை சார்ந்த பத்து அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு கட்டுரை வழங்கினர்.
அமெரிக்கா, லண்டன், இலங்கை, ஆகிய நாட்டைச் சேர்ந்த ஆய்வறிஞர்கள் சென்னை, புதுவை, தஞ்சை பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள் பங்கேற்றனர். ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். மாலை நிறைவு விழா நடைபெற்றது. நிறை விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்ப் பல்கலைக் கழக இலக்கியத் துறை மேனாள் தலைவர், பல்கலைக்கழக மேனாள் பதிவாளர் முனைவர் கு.வெ.பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சான்றிதழ் வழங்கினார். நிறைவு விழாவில் முனைவர் கற்பகம் வரவேற்புரையாற்றினார், கருத்தரங்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சகாயராணி நன்றியுரை வழங்கினார். கருத்தரங்கினை முனைவர் சகாயராணி, முனைவர் புவனேஸ்வரி, பேராசிரியர் கி.சதீஷ்குமார், முனைவர் பானுமதி முனைவர் லிண்டா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்வை தமிழ்த்துறை முதுநிலை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார், ஆங்கிலத்துறை முனைவர் உ. லிண்டா தொகுத்து வழங்கினர்.