பானிபூரி விற்பனையாளரிடம் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
தள்ளுவண்டியில் பானிபூரி விற்பனை செய்பவரிடம் கத்தியை காண்பித்து பணத்தை கொள்ளையடித்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
கடந்த 09.04.23-ம்தேதி, ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முஸ்லீம் தெரு, தாஜ் ஹோட்டல் முன்பு நடந்து சென்ற பானிபூரி விற்பனையாளரிடம் ஒரு நபர் கத்தியை காண்பித்து பணம் ரூ.500/- பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் ஏர்போர்ட் காவல்நிலையத்தில் பெண்களை தாக்கி, மானபங்கப்படுத்தியதாக 3 வழக்குகளும், பொது மக்களுக்கு பொது தொல்லை கொடுத்ததாக 4 வழக்குகளும், ஆக மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் உள்ள காமராஜர் நகரை சேர்ந்த எதிரி செந்தில்குமார், (42), என்பவர் இக்குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடர்ந்து அவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, எதிரி செந்தில்குமார் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர் எனவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் எனவும் விசாரணையில் தெரியவந்ததால், மேற்படி எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஏர்போர்ட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.