சீமான் மீது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பரபரப்பு குற்றச்சாட்டு
திருச்சி, செப். 17 திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நாம் தமிழர் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரபு தலைமையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
அப்போது வழக்கறிஞர் பிரபு கூறுகையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வரை யாருக்கும் அதிகார பகிர்வு கொடுக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். கட்சிக்காக அவர் ஒவ்வொரு முறை நிதி கேட்கும்போதும் எங்களுடைய கைகளில் இருந்தும், பாக்கெட்டுகளில் இருந்தும் அள்ளி பல கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். உதாரணத்திற்கு இலங்கையில் பொருளாதார ரீதியாக தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது கட்சி சார்பில் ஆயிரம் டன் உணவுப் பொருட்களும், பல கோடி ரூபாய் நிதியும் வழங்கியுள்ளோம். ஆனால், அந்த உணவுப் பொருட்களும், பணமும் இலங்கையில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு சென்றடையவில்லை.
அதேபோல, கட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய தொண்டர்கள் நிர்வாகிகள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியை நான் தான் வளர்த்தேன் என சீமான் கூறுகிறார். கட்சியை வளர்த்ததற்கு எங்களுக்கும் பங்கு உள்ளது. சரியான முறையில் பணம் செலவழித்து இருந்தால் இன்று 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள் என்று கூறினார்.