மோடி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவருடைய எண்ணம் பலிக்காது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி
திருச்சி, ஏப். 14 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கும் திராவிட ஜனநாயகத்திற்கும் நடக்கும் அறப்போர். இதில் டெல்லி ஏகாதிபத்தியத்தின் முதல் முறிந்து நொறுங்கிப் போகும் – திருச்சி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி
அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
மோடி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவருடைய எண்ணம் பலிக்காது.அவரும் அவருடைய பரிவாரங்களும் திராவிட இயக்கம் குறித்து மிகவும் இழிவாக பேசுகிறார்கள்.குறிப்பாக அமித்ஷா திராவிட இயக்கத்தை வேரோடு அழிப்பேன் என்கிறார்.
திராவிட இயக்கத்தின் அடிச்சுவடி அறியாததால் அப்படி பேசுகிறார்.வியர்வையும் ரத்தமும் சிந்தி வளர்ந்த இயக்கம் திராவிட இயக்கம்.தியாகத்தால் வளர்ந்த திராவிட கோட்டையை ஒரு நாளும் யாராலும் அசைக்க முடியாதுதிராவிட இயக்கத்திற்கு வட புலத்தில் இருந்து வரும் ஆபத்துக்காக நாங்கள் எல்லாம் ஒன்று கூடி எதிர்க்க எடுத்த முடிவின் படி திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம்.
கலைஞர் கருணாநிதி உடல்நலம் இல்லாமல் இருந்த பொழுது அவரை சந்தித்து உங்களுக்கு பக்கபலமாக இருந்தது போல் ஸ்டாலினுக்கும் இருப்பேன் எனக் கூறினேன்.
தொகுதி உடன்பாடு கையெழுத்து ஆன போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை நினைவு கூர்ந்து கலைஞருக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டீர்கள் என கூறினார்.
திராவிட இயக்கத்திற்கு அரணாக இருக்க வேண்டியது மதிமுகவின் கடமை என்கிற உணர்வோடு தான் நாங்கள் முடிவு எடுத்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தோம். அதற்கு மேலும் மேலும் வலு சேர்க்கும் வகையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
ராகுல் காந்தியும் தமிழ்நாட்டிற்கு பிரச்சாரம் செய்ய வருவார் அவர் இதுவரை வராததில் யாருக்கும் அதிருப்தி இல்லை.
அதிமுகவினருக்கு அரசியல் அடி சுவடே தெரியவில்லை.
டெல்லி ஏகாதிபத்தியம் பல்வேறு வகைகளில் வலைவீசி தமிழ்நாட்டை கைப்பற்ற முனைகிறது. அதனால்தான் இதை டெல்லி ஏகாதிபத்தியத்திற்கும் திராவிட ஜனநாயகத்திற்கும் நடக்கும் அறப்போர் என நாங்கள் கூறுகிறோம். இந்தப் போரில் டெல்லி ஏகாதிபத்தியத்தின் முனை முறிந்து நொறுங்கிப் போகும்.
நாங்கள் 210 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்