5 ஆண்டுகால சாதனைகள் தொடர்ந்திட வாக்களிப்பீர் உதயசூரியனுக்கு : தி.மு.க. வேட்பாளர் கதிரவன் பிரச்சாரம்
திருச்சி, ஏப்.18 மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான கதிரவன், நேற்று மண்ணச்சநல்லுார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு சேகரித்து மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது கதிரவன் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, திராவிடத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த வரும் திராவிட மாடல் ஆட்சியில், நாளுக்கு ஒரு திட்டம், பொழுதுக்கு ஒரு திட்டம் என நாள் தோறும் மக்களுக்கு வளர்ச்சித்திட்டங்களையும், நலத்திட்டங்களையும் வாரி வழங்கியுள்ளார். அந்த வளர்ச்சி திட்டங்கள் மண்ணச்சநல்லுார் தொகுதியில் செல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையில்தான், அந்த உரிமையில் தான், உங்கள் வீட்டுப்பிள்ளையாக கதிரவனாகிய நான் மீண்டும் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.
திருச்சி மாவட்டத்தின் வளர்ந்து வரும் மிகப்பெரிய நகர்ப்பகுதியாகவும், பெரும் வருவாய் ஈட்டும் பகுதியாகவும் உள்ள மண்ணச்சநல்லுார் பேரூராட்சி பகுதி கடந்த 5 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியையும், ஏற்றத்தையும் கண்டிருக்கிறது.அந்த வளர்ச்சியில் எம்எல்ஏ என்ற முறையில் நானும் சிறு உதவிகரமாக இருந்திருக்கிறேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மண்ணச்சநல்லுார் மக்களுக்கான மகத்தான இப்பணியும், சேவையும் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் 2-ம் முறையாக வேட்பாளராகி உங்கள் ஆதரவை கேட்டு வந்திருக்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில், சாலைகள், தெருவிளக்குள், வடிகால் வசதிகள் என அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல பகுதிகளில் பட்டா பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நிலுவையில் இருந்த பாதாள சாக்கடைப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், பைபாஸ் சாலைப்பணிகள் ஆகியவை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதவிர இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்காக மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
மண்ணச்சநல்லூர்பேரூராட்சி பகுதி மக்களுக்கு மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.30 கோடி மதிப்பிலான மருத்துவ சேவைகள், மருந்து, மாத்திரைகள், உபகரணங்கள் கட்டணமின்றி வழங்கப்பட்டு, அவர்களது ஆரோக்கிய வாழ்வு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, பல மாணவர்களின் உயர்கல்வி கனவும் கட்டணமின்றி நனவாக்கப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லுார் மக்கள், குறிப்பாக, பெண்கள், இளைஞர்களுக்கான இந்த மனிதாபிமான மக்கள் சேவைகள் தொடர, வரும் தேர்தலில் எனக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து முழு ஆதரவை அளிக்க வேண்டும்.
மண்ணச்சநல்லூர் நகரம், வணிகர்கள் நிறைந்த பகுதியாகும். கடந்த 5 ஆண்டுகளில், எம் எல் ஏ என்ற முறையில் என்னால், இவர்களுக்கு ஒரு சிறு தொந்தரவு கூட இருந்தது இல்லை. மாறாக, அவர்களது தோளோடு தோள் நின்று அவர்களது பிரச்னைகளை தீர்க்கவே குரல் கொடுத்திருக்கிறேன். இந்த அமைதியான, பாதுகாப்பான வணிகச்சூழல் மண்ணச்சநல்லுாரில் தொடர, நீங்கள் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்யவேண்டும்.
எதிர்க்கட்சி வேட்பாளர், நடிகர் கட்சி வேட்பாளர், அண்ணன் கட்சி வேட்பாளர் என மூலைக்கு மூலை வந்து, உங்களை மூளைச்சலவை செய்ய பார்ப்பார்கள். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கி, மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல், கடந்த 5 ஆண்டுகளாக உங்களுக்கு கிடைத்த அரசின் திட்டங்கள், இந்த கதிரவனின் கைகளால் வழங்கப்பட்ட உதவிகள், மருத்துவ, கல்வி சேவைகளை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு எம்எல்ஏ கதிரவன் பேசினார்.