ஆராத்தி தட்டுக்கு பணம் பட்டுவாடா : பாஜக நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் புகார்
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வேளாண்மை உதவி அலுவலர் பி.ரேணுகா தேவி தலைமையில் தேர்தல் வீடியோ கண்காணிப்பு குழுவினர் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணூத்து கிராமத்தில் இன்று கரூர் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன், மக்களிடையே வாக்கு சேகரித்துக் கொண்டிருந்ததை கண்காணித்து வந்துள்ளனர். அப்போது பாஜக நிர்வாகிகள் பொதுமக்களிடம் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கூறி ஆராத்தி தட்டு வைத்திருந்த வாக்காளர்களுக்கும் சிறுவர்களுக்கும் தட்டுக்கு ரூ.50 வீதம் 10 பேருக்கு 500 ரூபாய் என பணம் பட்டுவாடா செய்வது தெரியவந்தது. இதை வீடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியதால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு ரேணுகாதேவி புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.