பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்லும் மக்கள் : தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
திருச்சி, ஜன.19 திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் – பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு சாரை சாரையாக செல்லும் மக்கள் .
பொங்கல் விழா தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி படையெடுத்து சாரை சாரையாக வாகனங்களில் சென்னை நோக்கி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது .
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையின் நிறைவாக காணும் பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். கார், வேன், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், இருசக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் சென்னையை நோக்கி சாரை சாரையாக படையெடுக்க தொடங்கியுள்ளனர் . இதனால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 1 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் ஆமை போல் நகர்ந்து செல்கின்றன.
வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்வதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் உடன் காவல்துறையினரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.