மக்கள் கோர்ட் மூலம் 3,112 வழக்குகளுக்கு ரூ.25¾ கோடியில் சமரச தீர்வு
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சென்னை தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிக்காட்டுதலின்படி, திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் கோர்ட் நடந்தது.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 13 அமர்வுகளும், லால்குடி, துறையூர் வட்டங்களில் தலா 2 அமர்வுகளும், ஸ்ரீரங்கம், முசிறி மற்றும் மணப்பாறை வட்டங்களில் தலா ஒரு அமர்வு என திருச்சி மாவட்டத்தில் 20 அமர்வுகள் நடைபெற்றது.
திருச்சி கோர்ட்டில் நடந்த அமர்வை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான கிளாட்ஸ்டோன் பிளசட் தாகூர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான விவேகானந்தன் முன்னிலை வகித்தார். குற்றவியல் வக்கீல்கள் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் அனைவரையும் வரவேற்றார்.

குடும்பநல நீதிபதி ராஜவேல், குற்றவியல் நீதிமன்ற நடுவர் கார்த்திக் ஆசாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட நீதிபதிகள் உள்பட அனைத்து கோர்ட்டு நீதிபதிகள், பட்டியல் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், சட்டத்தன்னார்வலர்கள் நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பங்களிப்புடன் மக்கள் கோர்ட்டு அமர்வு நடைபெற்றது.
மக்கள் கோர்ட்டில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், ஜீவனாம்சம் கோரிய வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு கோரிய வழக்குகள், தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் நஷ்டஈடு கோரிய வழக்குகள், அரசு நில – ஆர்ஜீத சம்மந்தப்பட்ட இழப்பீடு போன்ற வழக்குகளில் இருதரப்பினர்களிடையே பேசி மக்கள் கோர்ட்டுகளில், சமரச முறையில் நிரந்தர தீர்வு காணப்பட்டது.

மேலும் வங்கிகளின் வாரா கடன் வழக்குகள் மற்றும் காசோலை மோசடி வழக்குகளும் ஆக மொத்தம் சுமார் 5 ஆயிரம் வழக்குகளுக்கு மேல் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு அவற்றில் 3,112 வழக்குகள் சமரச முறையில் தீர்வுகாணப்பட்டது. அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை இல்லாத அளவில் ரூ.25 – கோடியே 80 லட்சத்து 18 ஆயிரத்து 859 மதிப்பிலான தொகைக்கு காசோலைகள் வழங்கப்பட்டது.