மொண்டிப்பட்டியில் ரூ.350 கோடியில் “டிஷ்யூ” காகிதம் உற்பத்திக் கூடம் : காணொலி காட்சி மூலம் முதல்வர் திறப்பு
திருச்சி, ஆக.14 தமிழ்நாடு முதலமைச்சர்ச.ஜோசப் விஜய் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மொண்டிப்பட்டியில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டிஷ்யூ காகிதம் வணிக உற்பத்திக்கான உற்பத்தித் திட்டத்தை காணொளிக் காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மொண்டிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்ரா.கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.
தென்னிந்தியாவில் முதன்முறையாக டிஷ்யூ காகித உற்பத்திக்கான வணிகத்தைத் தொடங்குவதால், உலகளாவிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி “லூமியா” என்ற பிராண்டின் கீழ் /பேஷியல், நாப்கின், டவல் மற்றும் கழிவறைப் பயன்பாட்டிற்கென நான்கு வகைகளில் உயர்தர டிஷ்யூ காகிதங்கள் வணிகப்படுத்தப்படும். இதனால் இப்பகுதியின் தொழில் வளர்ச்சியும் மக்களின் வாழ்வாதாரமும், வேலைவாய்ப்பும் மேம்படும்.
தமிழ்நாடு அரசின் முனைவகமான தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்), திருச்சி மாவட்டம், மொண்டிப்பட்டியில் அமைந்துள்ள தனது இரண்டாம் அலகு வளாகத்தில் அதிநவீன டிஷ்யூ காகித ஆலையை நிறுவியதன் மூலம் வளர்ச்சியின் புதிய கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. தூய்மை பயன்பாட்டிற்கான டிஷ்யூ காகிதத் துறையில் டிஎன்பிஎல் மேற்கொண்டுள்ள செயல் உக்தியாக இப்புதிய ஆலை அமைந்துள்ளது. இந்தியாவின் ஒருங்கிணைந்த காகிதக் கூழ் மற்றும் காகித உற்பத்தி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் டிஎன்பிஎல்-இன் நிலையை இது மேலும் உறுதியாக்குகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்தச் சிறப்புமிக்க ஆலை தொடங்கி வைக்கப்படுவது, மாநிலத்தில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுடன் கூடிய உற்பத்தியை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
இந்நிகழ்வில், தலைமை பொதுமேலாளர் (இயக்கம்) பானுபிரசாத் , துணை பொதுமேலாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) அருள்மொழித்தேவன் , துணை பொதுமேலாளர் (எனர்ஜி) ஆற்றல் ஆர்.முரளி , துணை பொதுமேலாளர் (கருவிமயமாக்கல்) சு.கந்தவேல், பொதுமேலாளர் (மனிதவளம்) A.வேல்முருகராஜ், துணை பொதுமேலாளர் (உற்பத்தி) எஸ்.கண்ணன் , வருவாய் கோட்டாட்சியர் தமிழ்மணி, மணப்பாறை சுந்தரபாண்டியன், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.