கொத்தடிமைகளாக வேலை பார்த்த 6 பேரை மீட்ட ஆர்டிஓ…
தண்டாங்கோரையில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 6 பேரை லால்குடி ஆர்டிஓ மீட்டார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்டாங்கோரை கிராமத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 6 பணியாளர்களை லால்குடி வருவாய் கோட்டாச்சியர் மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு நல மையத்தில் ஒப்படைத்தார்.
தண்டாங்கோரை கிராமத்தில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல்சூளையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான அய்யனார், 21 வயதான மாரியம்மாள், 10 வயதன ஏழுமலை, 11 வயதான ஆதி லட்சுமி உள்ளிட்ட ஆறு நபர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன் தண்டாங்கோரையில் உள்ள செங்கல் சூளைக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தபோது கொத்தடிமைகளாக நடத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர் அவர்களை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல மையத்தில் ஒப்படைத்தார்.