சர்க்கார்பாளையம் பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி, ஜன 12 திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லணை சாலை இணையக்கூடிய பகுதியில் சாலையை கடந்து செல்ல கூடிய வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனிடையே அப்பகுதியில் பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (24). இவர் ஹோட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் .
இந்நிலையில் வேலை முடித்து வீடு திரும்பும் போது சஞ்சீவி நகர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை டூவீலரில் கடக்க முயன்ற போது, சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் விக்னேஷ் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர்.
பொதுமக்களின் கோரிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.