வியாபாரிகளை நெருக்கடிக்கு ஆளாக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பெட்ரோல், டீசல், விலை உயர்வு, உணவு பாதுகாப்பு துறையினர் வியாபாரிகளை அச்சுருத்துதல், ஜி.எஸ்.டி., சரக்கு சேவை வரி எதிர்ப்பு உள்ளிட்ட 4 பிரச்சனைகளுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் ரவிமுத்துராஜா, செயலாளர் எஸ்.பி.பாபு, பொருளாளர் டி.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த டைமன் ராஜா கூறுகையில், சோதனை என்ற பெயரில் சிறு வியாபாரிகளை இன்னலுக்கு உள்ளாக்கும் நடவடிக்கையை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு சில அதிகாரிகள் செய்யும் தவறு காரணமாக ஒட்டுமொத்த அதிகாரிகளின் நற்பெயரும் கெடும் சூழல் உருவாகிறது. எனவே அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கையை நிறுத்த வில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.