சாரண, சாரணியர் வைரவிழா ஆலோசனை கூட்டம்
திருச்சி, நவ. 12 திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் / தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், பள்ளி கல்வித்துறை அரசு செயலாளர் எஸ்.மதுமதி, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இந்திய தேசிய அளவில் நடைபெறும் 75ஆவது சாரணப் பெருந்திரளணி 2025, ஜன 28-ல் இருந்து பிப்ரவரி 3 வரை திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை அருகே உள்ள சிப்காட் வளாகத்தில் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏறத்தாழ 15 ஆயிரம் சாரண சாரணியர்கள் பங்கேற்க உள்ளார்கள். (நவ.7 ) இவ்விழாவின் முதல் அறிவிப்பு இதழ் மற்றும் விழாவின் இலச்சினையை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் தமிழ்நாடு பாரத சாரண சாரணிய இயக்கத் தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் வெளியிட்டார்.
சாரணப் பெருந்திரளணி விழாவின் முதல் ஆயத்தத் கூட்டம், கராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில்நகராட்சி நிருவாகத்துறை அமைச்சரின் திருச்சி முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார்,மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்களுடன் நவ.10 அன் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், பள்ளி கல்வித்துறை அரசு செயலாளர் எஸ்.மதுமதி, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் நேற்று கூட்டம் நடைபெற்றது.
பெருந்திரளணியை வெற்றிகரமாக நடத்த எட்டு இயக்குநர்கள் தலைமையில் 33 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவினர் பிரிந்து அனைத்து பணிகளையும் மேற்கொள்வார்கள். சாரண சாரணிய வைர விழா மற்றும் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழா வெற்றிகரமாக நடப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் திருச்சி மாநகரில் 8 வெவ்வேறு மய்யங்களில் நடைபெற்றது. இக்கூட்டங்களில் முன்னதாக வருகை புரிந்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.மதுமதி , சாரண சாரணியர் வைர விழா மற்றும் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தலைமை பொறுப்பாளருமான முனைவர்அறிவொளி ஆகியோர் பங்கேற்று முதன்மை குழு பொறுப்பாளர்கள் அனைவருக்கும் சிறந்த முறையில் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித் குப்தா, மாநில முதன்மை பேராணையர் பாரத சாரண சாரணியர் இயக்க பெருந்திரளணி பொறுப்பாளர் அறிவொளி, மாநில தொடக்கக் கல்வி இயக்குநர்கள் கண்ணப்பன், நரேஷ், பழனிச்சாமி,நாகராஜமுருகன், இராமேஸ்வரமுருகன், குப்புசாமி, சேதுராமவர்மா, உஷாராணி, சாரணர் இயக்க தேசிய செயல் இயக்குநர் அமீர்ஷத்ரி, மாநில பொருளாளர் விஜயன் ஆகியோருடன் இணை இயக்குநர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், சாரண சாரணியர் இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.