அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் கடைகள் ஒதுக்கீடு செய்யக் கோரி தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்
திருச்சி, நவ.14 திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யக்கூடாத இடமாக அறிவித்து அங்குள்ள கடைகளை அகற்றவும், தற்போது வரை சாலை வியாபாரம் நடத்தி வரும் கடைகளுக்கு மாற்றாக உரிய இடம் வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதனையடுத்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் வெண்டிங் கமிட்டியுடன் நடத்திய ஆலோசனையில், தெப்பக்குளத்தை சுற்றி உள்ள பகுதியில் தற்போது சாலை வியாபாரம் நடத்தி வரும் கடைகளை ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலக இடத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளவும், ஏனைய கடைகளை வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
191 கடைகள் உள்ள நிலையில் தற்போது பழைய நகராட்சி அலுவலகத்தில் 148 கடைகள் மட்டுமே செயல்படமுடியும், இதில் வெண்டிங் கமிட்டியை சேர்ந்த தொழிற்சங்கத்தில் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து கடை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வெண்டிங் கமிட்டி மூலம் அனைத்து தரைக்கடை வியாபாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்ட நிலையில், அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் உரிய முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்யாமல் தன்னிச்சையாக செயல்படுவதை கண்டித்தும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தரைக்கடை வியாபாரிகள் தெப்பக்குளம் காந்தி சிலையின் அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.