பாரதிதாசன் பல்கலை.யில் மாணவர்களுக்கான உதவி மையம்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார்
திருச்சி, நவ.12 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டலின்படி, அனைத்துகல்வி நிறுவனங்களிலும் மாணவ, மாணவியர், ஆராய்ச்சி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பட்டப்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை முதலான விபரங்கள் அனைத்தையும் வழங்கும் “உதவி மையம்” ஏற்படுத்த ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட நிகழ்வாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் இன்று திறந்து வைத்து, உதவி மையத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் தலைமையில் வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக முதன்மை நுழைவுவாயிலில் செயல்படும் இந்த உதவி மையம் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனிநபர் தேவையின் அடிப்படையில் அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்தும் வெளிப்படை தன்மையுடனும் ஒரே இடத்தில் மேற்படி தகவல்களை வழங்கவும் மற்றும் வழிகாட்டவும் என பன்முக உதவிகளை மேற்கொள்ளத்தக்க தகுதிவாய்ந்த நபர்களையும் தகவமைப்புகளையும் உள்ளடக்கியதாக செயல்பட உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம். மேலும், தேவைப்படின் மேல்முறையீட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தகவல்களையும் மேற்படி உதவி மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிகழ்வில் உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், கல்லூரிக் கல்வி இயக்குநர் சுந்தரவள்ளி, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆபிரகாம், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணை ஆணையர் விஜயகுமார், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மற்றும் மாவட்ட கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் பொன் முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பதிவாளர் முனைவர் இரா. காளிதாசன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.