மணப்பாறையில் யோகா செய்து அசத்திய மாணவ, மாணவிகள்
திருச்சி, ஜூன் 21 மணப்பாறை அருகே சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு யோகாசனங்கள் செய்து அசத்திய அரசு பள்ளி மாணவ – மாணவிகள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ- மாணவிகள் தங்களின் வீடுகளில் இருந்து தரை விரிப்பு எடுத்து வந்து தரையில் விரித்து யோகாசனங்களில் ஈடுபட்டனர். பலவேறு வகையான யோகாசனங்களை செய்து அசத்தினர்.
இதையடுத்து வீடுகளில் தினமும் யோகாசனங்களை செய்திட வேண்டும் என்றும் அப்படி யோகாசனம் செய்து அதை பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு அனுப்பிட வேண்டும் என்று ஆசிரியர்கள் மாணவர்களை வலியுறுத்தினர்.
அப்போது தான் யோகாவை தொடர்ந்து செய்திட முடியும் என்றும் யோகாசனத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது. ஒவ்வொரு ஆசனத்தினால் ஏற்படும் பயன் குறித்தும் பள்ளி மாணவர் ஒவ்வொரு ஆசனங்கள் முடியும் போது விளக்கி கூறினார்.