திருச்சியில் வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து
திருச்சி, ஆக.20-திருச்சி பெரியகடைவீதி கிலேதார் தெருவில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இந்த வணிகவளாகத்தின் மாடியில் உள்ள பேக்குடோனில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி குடோனில் வைத்திருந்த பேக்குகள் எரிய தொடங்கின. அந்த வணிக வளாகத்தில் இருந்து தீ கொழுந்துவிட்டு எரிந்ததை கண்ட அந்த பகுதியினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வாகனத்தில் அங்கு சென்ற தீயணைப்புவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குடோனில் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ஏராளமான பேக்குகள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என கோட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் நேற்று இரவு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது