டெட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு எங்களை கைவிட்டு விட்டது : ஆசிரியர்கள் வேதனை
திருச்சி செப்.22 தகுதி காண் பருவம் முடித்த பணியில் மூத்த நிரந்தர ஆசிரியர்களை பாதுகாக்க கர்நாடக அரசு சட்டமன்றத்தைக் கூட்டி சிறப்பு சட்டத்தை உருவாக்க உள்ளதை பின்பற்றி, தமிழக அரசும் சிறப்பு சட்டத்தை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர்கள் பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், TET தேர்வு விவகாரத்தை தமிழக அரசும், தமிழக பள்ளி கல்வித்துறையும் மிக அலட்சியமாக கையாண்டதன் காரணமாக தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் பணி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
டெட் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்வார்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி சீராய்வு மனு அல்லது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுமனு தாக்கல் செய்து ஆசிரியர்கள் பணி பாதுகாப்பை உறுதி செய்வது தமிழக அரசின் முதல் முழு முதல் கடமை என்பதை மறந்து விட்டு ஆசிரியர் சங்கங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்வார்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பது தமிழக அரசும், பள்ளிக் கல்வி துறையும், அரசு தரப்பு வழக்கறிஞர்களும் இரண்டு லட்சம் ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு விஷயத்தில் அவர்களின் அலட்சியத்தை காட்டுகிறது.
டெட் தேர்வு அமல்படுத்துவது இயற்கை நியதிக்கும் அரசியல் அமைப்பு சட்ட பிரிவுகள் வழங்கியுள்ள பணி பாதுகாப்புக்கும் எதிரானது ஆகும் . எனவே டெட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறுபரிசலனை செய்யக்கோரி சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
இந்த தீர்ப்பில் உரிய மாற்றம் செய்து தீர்ப்பு வழங்கப்படாவிட்டால் தீர்ப்பை எதிர்த்து மூன்று நீதியரசர் அமர்வில் மேல்முறையீட்டு மனு Curative pettion உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப் போவதாக தெரிவித்தனர்.