தை அமாவாசை : நீண்ட வரிசையில் காத்திருந்தும் சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்
திருச்சி, ஜன.19 தை அமாவாசை சமயபுரம் மாரியம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்ற பக்தர்கள்
தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஜன.18) தை அமாவாசையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலை முதலே கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். இதனால் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் வாங்க கவுண்டரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் வழக்கம்போல் இரவு 9 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாததால் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்யாமல் ராஜகோபுரத்தின் முன்பு தேங்காய் உடைத்து தீபமேற்றி வழிபட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இரவில் கோயில் வளாகத்தில் தங்கி அதிகாலையில் அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வதற்காக கோவில் வளாகத்தில் தங்கியதால் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.