நடத்துநரைக் கண்டித்து அரசு பேருந்து சிறைபிடித்து போராட்டம்
திருச்சி, மே 29 திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த பெண் சங்கீதபிரியா நேற்று மாலை திருச்சியில் இருந்து தனது தாயார் செல்வராணியுடன் மணப்பாறை வழியாக திருச்சியிலிருந்து பழனி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். சற்று நேரத்தில் குழந்தைக்கு பால் வாங்க பேருந்தை விட்டு இறங்கிய அவரது தாயார் வர சற்று காலதாமதம் ஏற்படவே பேருந்தின் நடத்துனர் அய்யம்பெருமாள் அந்தப் பெண்ணை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பெண்ணை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டு பஸ் பழனி நோக்கி புறப்பட்டு சென்றது.
இதுபற்றிய தகவலை அந்தப் பெண் மணப்பாறையில் உள்ள தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவே ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டி பகுதிக்கு வந்த போது பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் இருதப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பேருந்தில் வந்த பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்து நடத்துனர் அய்யம்பெருமாள், சங்கீத பிரியாவின் மாமனார் செல்வராஜின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதையடுத்து பிரச்சனை முடிக்கு வந்தது. இதனையடுத்து பேருந்தை எடுத்துக் கொண்டு பழனிக்குச் சென்றனர்.