கொலை மிரட்டல் விடுத்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
முன்விரோதம் காரணமாக வெல்டிங் தொழிலாளியை ஆபாசமாக திட்டியும், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.
கடந்த 18.04.23-ம்தேதி, அரியமங்களம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட உக்கடை பகுதியில் வெல்டிங் தொழிலாளி ஒருவரை முன்விரோதம் காரணமாக ஆபாசமாக திட்டியும், கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் ரவுடி குவாட்டர் (எ) ரெத்தினவேல், 20/23, த.பெ.பழனிசாமி மற்றும் 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் ரவுடி குவாட்டர் (எ) ரெத்தினவேல் என்பவர் மீது அரியமங்களம் காவல்நிலையத்தில் காய்கறி வியாபாரியை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு வழக்கும், பலகாரக்கடை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக ஒரு வழக்கும், டிரைவரை ஆபாசமாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு வழக்கு உட்பட மொத்தம் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்து அவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, ரவுடி ரெத்தினவேல் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர் எனவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் எனவும் விசாரணையில் தெரியவந்ததால், மேற்படி ரவுடியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்களம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா,இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.