குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருமஞ்சனம்
திருச்சி, அக்.4 திருச்சி மாவட்டம், முசிறி அருகே குணசீலத்தில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருமஞ்சனம் கண்டு அருளினார்.
தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், குணசீல மஹரிஷியின் தவத்தினையடுத்து பிரசன்ன வேங்கடேசனாக காட்சியளித்த ஸ்தலமான திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இங்கு புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தை கொண்டு பிரம்மோற்சவம் 11- நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 24-ம் தேதி பிரம்மோற்சவமானது கொடியேற்றத்துடன் தொடங்கி அதனைத் தொடர்ந்து தினமும் அனுமந்தவாகனம், சேஷவாகனம், யானைவாகனம், அன்னவாகனம், குதிரை வாகனம், வெள்ளிக் கருடவாகனத்தில் உபயநாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலாவந்தார்.
விழாவின் முக்கியநிகழ்வான திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி 2-ம் தேதி வெகுவிமரிசையாக நடந்தது. தொடர்ந்து உற்சவர் பிரசன்ன வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் திருமஞ்சனம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இன்று பிரசன்ன வெங்கடாஜலபதி பூப்பல்லாக்கு உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்