பஞ்சப்பூரில் டைடல் பூங்கா கட்டுமான பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, டிச. 5 திருச்சி பஞ்சப்பூரில் ரூ. 403 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சரவணண் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிரப்வரி மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் ரூ. 403 கோடி மதிப்பீட்டில் 5.58 இலட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன் கூடிய டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
2000ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் விதமாக சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவினார். இதைத் தொடர்ந்து மாநிலத்தின் வளர்ந்து வரும் மாவட்டங்களிலும் டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. 2ஆம் கட்ட நகரங்களில் அதீத வளர்ச்சி கண்டு வரும் திருச்சியில் ரூ.403 கோடி மதிப்பீட்டில் 5.58 இலட்சம் சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டு வரும் புதிய டைடல் பூங்கா மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், மேற்பார்வை பொறியாளர் (தமிழ்நாடு மின்சார வாரியம்) பொறி.யாளர் மேரிமேக்டலின் பிரின்ஸி, டைடல் பூங்கா உதவி செயற் பொறியாளர் செந்தில்ராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், டைடல் பூங்கா கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.