மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த டிப்டாப் பெண்கள் வசமாக சிக்கினர்
திருச்சி, ஏப்.18 மணப்பாறையில் மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்த இரு டிப்டாப் பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு குவியும் பாராட்டு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 70). இவர் நேற்று பாரதியார்நகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவனைக்குச் சென்று விட்டு அரசுப் பேருந்தில் மணப்பாறைக்கு வந்தபோது பேருந்தில் டிப்டாப்பாக வந்த இருபெண்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்துள்ளனர். கடைவீதி பேருந்து நிறுத்தத்திற்கு பேருந்து வந்த போது மூதாட்டியிடம் செயின் பறிக்கப்பட்டதைக்கண்ட பேருந்தில் பயணம் செய்த மற்ற பெண்கள் சத்தமிட்டவே பெண்கள் இருவரும் நைசாக தப்பமுயன்றுள்ளனர். உடனடியாக அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சர்பட் ராயப்பன் மற்றும் பாலகுமரன் ஆகிய இருவரும் தப்பிச்செல்ல முயன்ற இரு பெண்களையும் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்த நிலையில் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துரிதமாக செயல்பட்டு இருபெண்களையும் மடக்கிப்பிடித்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். பரபரப்பான காலை நேரத்தில் மூதாட்டியிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.