“பயிற்சிதான் எல்லாவற்றிக்கும் அடித்தளம்”-காவல் ஆணையர் கார்த்திகேயன்!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான காவல் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 124 சிறைக்காவலர்களுக்கு கடந்த 08.03.2022-ம் தேதி பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப் பணிகள்துறையில் தேர்வான ஆண் மற்றும் பெண் சிறைக்காவலர்களுக்கான 6 மாத கால அடிப்படை பயிற்சி துவங்கும் விழா இன்று திருச்சி மத்தியசிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் பயிற்சி

பள்ளியில் நடைபெற்றது. இத்துவக்க விழா நிகழ்ச்சியில் திருச்சி சரக சிறைகள் மற்றும் சீர்த்திருத்தபணிகள் துறை துணைத் தலைவர் க.ஜெயபாரதி, திருச்சி மத்தியசிறை சிறை கண்காணிப்பாளர் எம்.செந்தில்குமார் மற்றும் திருச்சி மகளிர் தனிச்சிறை கண்காணிப்பாளர் ராஜலெட்சுமி ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மாநகர காவல்
ஆணையர் G.கார்த்திகேயன் பயிற்சி கையேட்டினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிக்கு புதியதாக பணி நியமனம் பெற்ற நபர்களை வாழ்த்தியும், பயிற்சி காலங்களில் நீங்கள் எடுக்கும் பயிற்சிதான் எல்லாவற்றிக்கும் அடித்தளமாக அமையும் என்றும், பொது இடத்தில் சவால்களை சந்திக்க உதவியாக இருக்கும் என்றும், பயிற்சி பெறும் இடத்தில் மட்டுமல்லாது, பொது இடத்திலும் தனிப்பட்ட முறையிலும் ஒழுக்கத்தை பேணிகாக்க வேண்டும் என்றார்.