போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 24 மணி நேர தொடர் முழக்கப் போராட்டம்
திருச்சி, ஆக,25, போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டும். ஒப்பந்தம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும். 1.4.2003 க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் உறுதிப்படுத்த வேண்டும். தொழில்நுட்ப பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் .ஜி சி சி என்ற பெயரில் தனியார் மூலம் மின்சார பேருந்துகளை இயக்காமல் கழகங்களே இயக்க வேண்டும். காலிப் பணியங்களை பூர்த்தி செய்து காண்ட்ராக்ட் முறைக்கு முடிவு கட்ட வேண்டும். ஓய்வு கால பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் ( சிஐடியு) சார்பில் செவ்வாய்க்கிழமை அரசு போக்குவரத்து கழக திருச்சி புறநகர் கிளை முன்பு 24 மணி நேர தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க திருச்சி கரூர் மண்டல தலைவர் சிங்கராயர் தலைமை தாங்கினார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் மாணிக்கம், பொருளாளர் முத்துக்குமார், சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் மணிமாறன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் சீனிவாசன், செயலாளர் சிவானந்தம், பொருளாளர் கருணாநிதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். போராட்டத்தின் நிறைவு நாளான இன்று (புதன்கிழமை), தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் நிறைவுரையாற்றுகிறார்