புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோ தெரபி சிகிச்சை கொடுக்கும் போது நோயாளிகளின் தலையில் உள்ள முடி விழுந்து தலை மொட்டையாகி விடுகிறது. இந்த கஷ்டத்தை அனுபவிக்காமல் இருப்பதற்காக நோயாளிகள் சிலருக்கு முன்னதாகவே மொட்டையடித்துவிட்டு கீமோ தெரபி சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சை பெறுபவர்கள் பணிகளுக்கு செல்லும் போது தலைமுடி இல்லாமல் வெளியே செல்ல கூச்சப்படுகிறார்கள்.

வசதி படைத்தவர்கள் விக் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோராலும் விக் வாங்க முடிவதில்லை. இதன் காரணமாக பல தொண்டு நிறுவனம் மற்றும்
NGOக்கள் பல பெண்களிடமிருந்து தானமாக பெற்ற முடிகளை வைத்து விக் உருவாக்கி பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் அளித்து வருகிறார்கள்.
புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பிப்ரவரி 4 முதல் மார்ச் 4 வரை புற்றுநோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, விக் தயாரிக்கும் நிறுவனங்கள் பெண்களிடம் இருந்து முடியைத் தானமாகப் பெறுகின்றனர். அதே போல,இன்று திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் முடி தானமாகக் கொடுக்கும் நிகழ்ச்சி தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றது. அதில், ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் தங்கள் முடியைத் தானமாகக் கொடுத்துள்ளனர்.