ஊராட்சி செயலாளரை தாக்கிய இருவர் கைது
தா.பேட்டை அருகே ஊராட்சி செயலாளரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கிய சகோதரர்கள் இருவர் கைது.
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கண்ணனூர் ஊராட்சி. இந்த ஊராட்சியின் செயலாளராக வேல்முருகன் (45) என்பவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக கணக்கெடுக்கும் பணியை முடித்துவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து, 100 நாள் வேலை திட்டத்தில் புதிய அட்டை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வந்துள்ளார். அப்போது கண்ணனூர் சமத்துவபுரம் வடக்குவெளி பகுதியை சேர்ந்த மலையப்பன் (30), அவரது தம்பி மாமுண்டி (28) மற்றும் சிலர் சேர்ந்து சட்டவிரோதமாத அத்துமீறி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் புகுந்து செல்போனில் பேசிகொண்டிருந்த வேல்முருகனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மலையப்பன், மாமுண்டி உள்ளிட்டோர் சேர்ந்து ஊராட்சி செயலாளரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டி உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதில் ஊராட்சி செயலாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் வேல்முருகனை துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் குறித்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து மலையப்பன், மாமுண்டி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.