வையம்பட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
திருச்சி, ஜூலை 24 மணப்பாறை அருகே ஒருதரப்பினர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்பட்டியில் கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்த நிலையில் இருவேறு தரப்பினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதில் ஒரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் மற்றொரு தரப்பினர் மீது வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இதுபற்றி தகவல் அறிந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வையம்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது எங்களிடம் எந்தவித விசாரணையும் நடத்தாமல் எப்படி எங்கள் மீது வழக்கு பதிவு செய்தீர்கள். ஆகவே இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுமக்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர்.
கிராமமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.