அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் ஆளுநரிடம் அதிமுக தெற்கு புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் புகார்
திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடந்த 2020 ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளூர் வளர்ச்சி நிதியின் கீழ் அமைக்கப்பட்ட பயணி நிழற்குடையில் அரசு பொறுப்பில் இல்லாத உதயநிதியின் படத்தை போட்டு நிழற்குடை அமைத்தார். இது மரபு மீறிய செயல் என்று கழகம் உள்பட பல்வேறு கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்ததன் பேரில் உதயநிதி படம் அகற்றப்பட்டது. தற்போது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று நேற்று (மே17) சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வி.வி. நகரில் உள்ள தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அலுவலர்களை வரவழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியதாக செய்தியும், புகைப்படமும் வெளிவந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் இந்த செயல் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவும், ஜனநாயக கேலி கூத்தாகவும், தவறான முன் உதாரணமாகவும் விளங்குகிறது. இந்த செயலை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் தமிழக ஆளுநர் அவர்கள் இதில் தலையிட்டு இறையாண்மை எதிராக செயல்படும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து பள்ளிக்கல்வித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இக்கூட்டம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை. மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் தன்னை சந்தித்து வாழ்த்து சொல்ல வந்தனர். ஆலோசனை கூட்டம் நடத்தியதாக கூறப்படுவது தவறான தகவல் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.