திருந்திய நெல் சாகுபடி : விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அழைப்பு.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் ஆலங்குடி மகாஜனம் கிராமத்தில் வெங்கடாஜலபதி என்ற விவசாயி அமைக்கப்பட்ட குருவை நெல் பாய் நாற்றங்கால் மற்றும் குமாரபாளையம் கிராமத்தில் ஜெயபால் என்ற விவசாயி எந்திரம் மூலம் நடவு செய்யப்பட்ட குருவை நெல் வயல் ஆகிவற்றை ஸ்டாமின் இயக்குனர் திரு. சங்கரலிங்கம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகள் அனைவரும் திருந்திய நெல் சாகுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்கள். அவ்வாறு திருந்திய நெல் சாகுபடி செய்யும்போது விவசாயிகள் அதிக மகசூல் பெற முடியும் என கூறினார்.
லால்குடி வட்டத்தில் குருவை நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து லால்குடி வட்டத்தில் நடப்பாண்டில் 3500 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண முறையில் நடவு செய்வதை தவிர்த்து திருந்திய நெல் சாகுபடி மற்றும் இயந்திரம் மூலம் நடவு செய்யும்போது 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெற முடியும்.திருந்திய நெல் சாகுபடி முறையில் ஒரு ஏக்கர் நெல் நடவு செய்ய 3.5 கிலோ நெல் விதை போதுமானது. மேட்டுப்பாத்தியில் நாற்றங்கால் அமைத்து மரச்சட்டங்களை வைத்து மண் மற்றும் தொழுஉரம் நிரப்பி விதைக்க வேண்டும்.15 நாள் வயதுடைய நாற்றுகளை பறித்து 22.5 சென்டிமீட்டர் × 22.5 சென்டிமீட்டர் இடைவெளியில் நடவு செய்வதன் மூலம் அதிக வேர் வளர்ச்சி அதிக தூர் எண்ணிக்கை மற்றும் அதிக நெல் மணிகள் கிடைக்கும்.நடவு செய்யும்போது ஒரு குத்துக்கு 1-2 நாற்றுகள் வைத்து நடவு செய்ய வயலில் லேசாகக் காய வைத்து நீர்விட வேண்டும். களைகளை கட்டுப்படுத்த நடவு செய்த 10ம் நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை கோனோ வீடர் களை எடுக்கும் கருவி மூலம் களை எடுக்கவேண்டும். காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி நன்றாக படுவதால் அதிக தூர்கள் வெடித்து ஏக்கருக்கு 3 மெட்ரிக் டன் மகசூல் பெற முடியும் எனக் கூறினார்.
இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட இணை இயக்குனர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் வேளாண்மை நேர்முக உதவியாளர்திருமதி சாந்தி, மாநில திட்ட வேளாண்மை துணை இயக்குனர் லட்சுமணசாமி, மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குநர் திருமதி மல்லிகா, வேளாண்மை துணை இயக்குநர் செல்வம், லால்குடி வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி ஜெயராணி, வேளாண்மை அலுவலர் சுகண்யா,உதவி விதை அலுவலர் சுரேஷ்குமார், வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகர்,அன்பில் வேளாண்மை உதவி அலுவலர் விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.