பசு மாட்டை திருடிச் சென்ற 2 பேர் கைது
திருச்சி, பிப். 24 திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் மேல்நிலைப்பள்ளி பின்புறம் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை திருடிச் சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சமயபுரம் அருகே மாகாளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் நெப்போலியன் (29). இவர் பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்து வருகிறார். தினமும்மேய்ச்சலுக்காக பசு மாடுகளை அவிழ்த்து விடுவது வழக்கம் .இந்நிலையில் கடந்த 22 ம் தேதி தனது பசு மாட்டை மேய்ச்சலுக்காக சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் மேல்நிலைப்பள்ளி பின்புறம் அவிழ்த்து விட்டிருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தபோது பசு மாட்டை காணவில்லை. மர்ம நபர்கள் பசுமாட்டை திருடிச் சென்றனர். இது குறித்து நெப்போலியன் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் பசுமாட்டை திருடி சென்ற மர்ம நபர்களை விசாரணை செய்து தேடி வந்தனர். விசாரணையில் பசுமாட்டை திருடிச் சென்றது ஸ்ரீரங்கம் தாலுகா கம்பரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (43) மற்றும் தனுஷ் (19) என தெரிய வந்தது.
பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த சமயபுரம் காவல்துறையினர் அவர்களை கைது செய்து திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் திருடிச் சென்ற பசுமாட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்,