மணல் கடத்தலுக்கு துணை போன 25 போலீசார் கூண்டோடு மாற்றம்: எஸ்பி வருண் குமார் அதிரடி
திருச்சி, ஜூன் 22 திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் கடந்த சில மாதங்களாக போலீசார் துணையுடன் மணல் கடத்தல் நடைபெறுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனைத்தொடர்ந்து எஸ்.பி. வருண் குமாரின் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு உதவி ஆய்வாளர் தவிர அனைவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மணல் கடத்தல் கும்பலோடு கைகோர்த்து செயல்படுவது தெரிய வந்தது.
இதுகுறித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த உதவி ஆய்வார் மணிகண்டனை தவிர புகாருக்குள்ளான 25 போலீசாரை உடனடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு எஸ்.பி. வருண்குமார் மாற்றம் செய்ததோடு ஒரு மணி நேரத்திற்குள் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார் இதனைத்தொடர்ந்து அனைவரும் ஆயுதப்படைக்கு சென்று ரிப்போரட் செய்தனர்.
ஒரே நாளில் 25 போலீசார பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் திருச்சி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.