ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 27 பவுன் நகை திருட்டு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள விரகாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி 63 வயதான வள்ளி. இவருடைய கணவர் காலமாகி விட்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இரண்டு மகன்களுக்கும் திருமணமான நிலையில் முதல் மகன் வெளிநாட்டிலும் இரண்டாவது மகன் சென்னையிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரண்டாவது மகனின் மனைவி ஆர்த்திக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மருமகளின் 27 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்துக் கொண்டு மூதாட்டி வள்ளி மகனுடன் காரில் வந்துள்ளார். இந்நிலையில் நம்பர் 1 டோல்கேட்டில் வள்ளியை இறக்கிவிட்டு மகன் சென்னைக்கு சென்று விட்டார். இதையடுத்து வள்ளி ஒரு தனியார் பேருந்தில் ஏறி லிரகாலுருக்கு சென்று கொண்டிருந்தார்.பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் வள்ளி நின்று கொண்டு பயணம் செய்துள்ளார். லால்குடி வந்ததும் அவருக்கு சீட்டு கிடைத்ததால் அதில் அமர்ந்துள்ளார். அப்போது நகைகள் வைத்திருந்த பையை பார்த்தபோது நகைகள் மாயமாகி இருந்தது. கூட்டத்தைப் பயன்படுத்தி அதனை மர்ம நபர்கள் யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளி பேருந்து பயணியிடம் விசாரித்தும் நகைகள் கிடைக்கவில்லை.
இது குறித்து அவர் லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் லால்குடி போலீசார் விசாரணை செய்து ஓடும் பேருந்தில் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.