குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் – திருச்சியில் அமைச்சர் பேட்டி!
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா பகுதி கவினார்பட்டியில் உள்ள புத்தக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 12.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. பள்ளிக்கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகெஷ் பொய்யமொழி.
பின்னர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்…”பள்ளியில் தற்போது இயங்காத சூழ்நிலையில் பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் போது அவர்களின் பிள்ளைகளும் வேலைக்கு செல்வதாக தெரிகிறது. குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்ககூடாது என்பதில் முதல்வர் இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆகவே அதுபோன்ற பள்ளியில் பாதியில் நின்று வேலைக்கு செல்வோரை கல்வி அதிகாரிகள் மூலம் கணக்கெடுத்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை ஆன்லைன் வகுப்பில் அதிக வசதிகள் உள்ளது. ஆனால் அரசு பள்ளிகளை பொறுத்தவரை 65 சதவிகித வசதிகள் தான் உள்ளது. இருப்பினும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கான அறிவுரை வழங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

சில கிராமங்களில் தொலைபேசி தொடர்பு கொள்ள கூட முடியாத அளவில் இருந்தது. தகவல் தொடர்பு துறை அமைச்சரிடமும் இதுகுறித்து வலியுறுத்தி உள்ளேன். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். பள்ளிகள் திறப்பிற்கு பின் பள்ளி மாணவிகள் நலன்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களில் விழிப்புணர்வு குறித்த கல்வி கொண்டு வரப்படும்” என்றார்
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமத், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், ஒன்றியச் செயலாளர்கள் ராமசாமி, செல்வராஜ், சின்ன அடைக்கன் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8