திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், இவர் தனது மனைவிக்கு வேலைக்காக இணையதளத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பேப்பள்ளி பகுதியை சேர்ந்த ரவிசங்கர் ரெட்டி(வயது 27) என்பவர் இணையதளம் மூலம் கிருஷ்ணகுமாரிடம் அறிமுகமானார். உங்கள் மனைவிக்கு பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று உறுதி கூறி பேசியுள்ளார்.
இதனை நம்பிய கிருஷ்ணகுமார் பல தவணைகளாக சுமார் ரூ.29 லட்சம் வரை கொடுத்துள்ளார். ஆனால் ரவிசங்கர் ரெட்டி வேலையும் வாங்கி கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனையடுத்து நேரில் சென்று ரவிசங்கர் ரெட்டியை பார்க்க முயற்சி செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் கிருஷ்ணகுமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் அன்புசெல்வம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ரவிசங்கரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் சென்று அங்கு பதுங்கியிருந்த ரவிசங்கர் ரெட்டியை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு முசிறி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.