திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாமை வருகிற 19ம் தேதி (சனிக்கிழமை) திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்துகிறார்கள். முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளை சேர்ந்த
100-க்கும் நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், இந்த மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, பிளஸ்-2, ஐ.டி.ஐ., செவிலியர், இளநிலை மற்றும் முதுநிலைபட்டதாரிகள், பொறியியல் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் சுயவிவரக்குறிப்பு, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார்அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.